
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே மத்திய அரசின் முன்னுரிமைப் பணி என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.
இது தொடர்பாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் தின விழாவில் பங்கேற்று அவர் பேசியதாவது:
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதே எங்கள் (மத்திய அரசு) முன்னுரிமையாகும். அந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்வதோடு, மிகப்பெரிய அளவிலான கவனத்தையும் செலுத்துவோம்.
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதிமுக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த நோக்கத்துக்காகவே பிரதமர் வேலைவாய்ப்பு ஊக்குவிப்புத் திட்டம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக, வேலைவாய்ப்புகளை வழங்குவோருக்கு (நிறுவனங்கள் உள்ளிட்டவை) ஊக்கத்தொகை வழங்கப்படும்.
தொழிலாளர்களின் நலன்களைக் கருதி, அவர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தும். எந்த அளவுக்கு பணித் திறன் அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு ஊதியமும் அதிகரிக்கிறது. நல்ல ஊதிய விகிதங்கள் வரும்போது தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் என்பதோடு, நியாயமான ஊதியமும் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு, ஊதியம், தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு ஆகியவை அரசின் இலக்குகளாகும். அமைப்புசாரா தொழில்துறை மீதும் மத்திய அரசு பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகிறது என்றார் தத்தாத்ரேயா.
இந்த விழாவில், இடம்பெயர்ந்து சென்று பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான மருத்துவ உதவித் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.