“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் ஆர்வம்: நிர்மலா சீதாராமன்

இந்தியத் தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற சிஐஐ அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்ட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நினைவு பரிசு வழங்குகிறார் அந்த அமைப்பின் தலைவர் சோபனா காமினேனி.

Updated On :9 ஏப்ரல் 2018, 7:48 pm

இந்தியத் தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மாநாட்டில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
இந்திய ஏவுகணைகளை வாங்க பல நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இதை இந்திய அரசு தனது கவனத்தில் கொண்டுள்ளது. அதேநேரத்தில் நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஏவுகணைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.
நமது நாட்டு பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புத் திறன் குறித்து விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்படி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணிபுரியும் பாதுகாப்புத் துறை வல்லுநர்களை நான் கேட்டுக் கொள்ள இருக்கிறேன். அவர்களை விற்பனை பிரதிநிதிகள் போல செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளப் போவதில்லை. 
இந்தியப் பாதுகாப்புப் படைகளின் திறனை வலுப்படுத்த நாம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்பது குறித்து எடுத்துரைக்கும்படி கேட்டுக் கொள்ள இருக்கிறேன். இப்படி செய்வதன்மூலம், இந்தியாவில் தயாரிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள் மீது உலக நாடுகள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.
காணாமல் போன வீரரின் தாயாருக்கு ஓய்வூதியம் கிடைக்க உதவி: இதனிடையே, அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோட்டுப் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர் ரிங்கு ராம் என்பவர் காணாமல் போனார். அவரது துப்பாக்கி மட்டும் கடந்த 2009ஆம் ஆண்டு கண்டெடுக்கப்பட்டது. ரிங்கு ராம் குறித்த தகவல் இல்லை.
இதையடுத்து, ரிங்கு ராமின் தாயார் கமலா தேவி, ஓய்வூதியம் கோரி ஆயுதப்படைகள் தீர்ப்பாயத்தை அணுகினார். அதற்கு ரிங்கு ராமின் சடலம் கண்டெடுக்கப்பட்டால் மட்டுமே அவரது ஓய்வூதியத்தை தாயாரிடம் அளிக்க முடியும் என்று பதிலளிக்கப்பட்டது.
இந்நிலையில், ரிங்கு ராம் தொடர்பான விவகாரம் குறித்த கோப்புகளை நிர்மலா சீதாராமன் ஆராய்ந்து, ஓய்வூதியம் அளிக்க உதவி செய்துள்ளார். இந்திய ஆதார சட்டத்தின்படி, ஒரு நபர் குறித்து 7 ஆண்டுகளுக்கு தகவல் தெரியவில்லையெனில், அவர் இறந்தவராகக் கருதப்படுவார். இதன்படி, ரிங்கு ராமுக்கான இறப்பு சான்றிதழை அருணாசலப் பிரதேச அரசு கடந்த 4-ஆம் தேதி அளித்தது. இதைத்தொடர்ந்து, ரிங்கு ராமுக்கான ஓய்வூதியத்தை அவரது தாயார் கமலாதேவிக்கு அளிக்க கடந்த 5-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதன்படி, கடந்த 2009 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்துக்கு மாதந்தோறும் ரூ.7 ஆயிரமும், அதன்பிந்தைய காலத்துக்கு மாதந்தோறும் ரூ.17,990-மும் ஓய்வூதியமாக அளிக்கப்படுகிறது. 
இதுமட்டுமன்றி, ரிங்கு ராமுக்கான பணிக்கொடை உள்பட ரூ.11 லட்சமும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.