நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்து: எஸ்சி., எஸ்டி., சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு! 

நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்தை விளைவித்து விடும் என்று எஸ்சி.,எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல்செய்துள்ளது.
நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்து: எஸ்சி., எஸ்டி., சட்டம் தொடர்பான தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு! 
Published on
Updated on
1 min read

புதுதில்லி: நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்தை விளைவித்து விடும் என்று எஸ்சி.,எஸ்டி சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மனு தாக்கல்செய்துள்ளது.

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது கடந்த மார்ச் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பு வழங்கியது. அதில், எஸ்சி,எஸ்டி சட்டத்தில் புகார் கொடுத்தால் உடனடியாக யாரையும் போலீஸார் கைது செய்யக்கூடாது. தீவிர விசாரணைக்கு பின்புதான் கைது செய்ய வேண்டும், முன்ஜாமீன் பெறலாம் என்று கூறியது.

மேலும் இந்த சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மீது புகார் கொடுக்கப்பட்டால், உயரதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பின்புதான் போலீஸார் கைது செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.

இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்றத்திலும் இந்த தீர்ப்பு எதிரொலித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, கடந்த 3-ம் தேதி தலித் அமைப்புகள் சார்பில் வடமாநிலங்களில் "பாரத் பந்த்" நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் நடந்த வன்முறையில், 8 பேர் கொல்லப்பட்டனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு ஒன்றை கடந்த 2-ம் தேதி தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவானது நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் முன் வியாழனன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த மனு விபரம் வருமாறு:

எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மீது கடந்த மாதம் 20-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்பது அந்த சட்டத்தின் விதிமுறைகளை நீர்த்துப்போகச் செய்யும் விதமாக அமைந்திருக்கிறது. இந்த தீர்ப்பு மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கிறது. இதன்காரணமாக எஸ்சி,எஸ்டி சட்டத்தில் ஏற்பட்ட இடைவெளிகளை எந்தவிதத்திலும் நிரப்ப முடியாது.

நீதித்துறை, சட்டம் இயற்றுபவர்கள் ஆகியோருக்கு  தனித்தனி அதிகாரம் அரசியலமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதில் மற்றொருவர் தலையிடுவது சரியாக இருக்காது.

இந்த தீர்ப்பு நாட்டின் ஒற்றுமைக்கே பெரிய ஆபத்தை விளைவித்து விடும். அத்துடன் இதன் காரணமாக நாட்டில் கொந்தளிப்பான சூழலும், மக்கள் மத்தியில் கோபமும், ஒற்றுமையின்மையும் நிலவுகிறது. எனவே மத்திய அரசின் சீராய்வு மனுவை ஏற்று, குறிப்பிட்ட தீர்ப்பில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com