பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு பிரதமர் தெரஸா மேவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, பயங்கரவாதத்தை ஒடுக்க உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். மேலும், இரு தரப்பு உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர்.
அப்போது, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகிவிட்டது என்பதால், அந்நாட்டுடனான இந்தியாவின் வர்த்தக உறவுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று தெரஸாவிடம் மோடி உறுதியளித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமருடன் சந்திப்பு: 5 நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி, தனது ஸ்வீடன் பயணத்தை முடித்துக் கொண்டு பிரிட்டனுக்கு புதன்கிழமை சென்றார். லண்டன் விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் தெரஸா மேவை அவரது அரசு இல்லத்தில் சென்று மோடி சந்தித்தார். அங்கு மோடிக்கு தெரஸா மே சார்பில் காலை விருந்து அளிக்கப்பட்டது. தொடர்ந்து இரு தலைவர்களும் இருதரப்பு வர்த்தகம், பொருளாதாரம், பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பு குறித்து விவாதித்தனர்.
இது குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்துள்ள தெரஸா மே, 'இந்தியப் பிரதமர் மோடியுடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. இந்தியா-பிரிட்டன் உறவை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வது குறித்து விவாதித்தோம்' என்று தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத்துக்கு எதிராக...: இந்த சந்திப்பு தொடர்பாக இரு நாடுகள் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதில், 'பயங்கரவாதம் எந்த வகையில் தலைதூக்கினாலும், அதனை ஒழிக்க கூட்டாக இணைந்து பணியாற்ற இந்தியாவும், பிரிட்டனும் ஒப்புக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன், ஹக்கானி பயங்கரவாதக் குழு, அல்-காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு ஆகியவற்றுக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக உறவு பாதிக்காது: பிரிட்டன் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சிரியாவில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதல்கள், சர்வதேச அளவில் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள், ஆன்லைனில் மூலம் பரப்பப்படும் அடிப்படைவாத பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து இரு தலைவர்களும் பேசினர். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகிவிட்டதால், இந்தியா- பிரிட்டன் வர்த்தக உறவுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று மோடி உறுதியளித்தார்.
சர்வதேச சந்தையை இந்தியா அணுகுவதற்கு லண்டன் நகரம்தான் மையமாக உள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், ரஷியா தங்கள் நாட்டில் வந்து உளவாளி மீது ரசாயனத் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து மோடியிடம் தெரஸா மே விவரித்தார். ஆயுதக் கடத்தல் குற்றச்சாட்டில் சிக்கி சென்னை சிறையில் இருந்த பிரிட்டனைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் 6 பேர் கடந்த ஆண்டு விடுக்கப்பட்டதற்கு மோடியிடம் தெரஸா மே வரவேற்புத் தெரிவித்தார்.
இது தவிர இருநாடுகள் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இதன் மூலம் இரு நாடுகளிலும் ஏராளமான வேலைவாய்ப்பு உருவாகும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் சார்லஸ் வரவேற்பு

மோடியின் வருகையை முன்னிட்டு லண்டனில் அறிவியல், தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பங்களிப்பு குறித்த கண்காட்சிக்கு பிரிட்டன் இளவரசர் சார்லஸ் ஏற்பாடு செய்திருந்தார். இந்த கண்காட்சிக்கு சென்ற மோடியை இளவரசர் சார்லஸ் வரவேற்றார். கண்காட்சியில் நடன நிகழ்ச்சியை மோடியும், சார்லஸும் பார்த்து ரசித்தனர்.
12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தத்துவ ஞானியும், சமூக சீர்திருத்தவாதியுமான பசவேஸ்வராவின் சிலைக்கு மோடி மலர் மரியாதை செலுத்தினார். பிரிட்டனில் உள்ள பசவேஸ்வரா அறக்கட்டளை சார்பில் அவருக்கு லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

தங்கம், வெள்ளி விலை நிலவரம்

எண்ணெய் வணிக நிறுவனங்கள் நஷ்டத்தை மட்டுமே பகிர்கின்றன: மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு காவல்துறை எந்த பாடத்தையும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை: அண்ணாமலை
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



