எல்லைப் பகுதியில் நிலைமையை நேரில் ஆய்வு செய்வதற்காக, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் உள்ள எல்லைப் பகுதிக்கு அடுத்த மாதம் செல்கிறது.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான அந்தக் குழுவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட 31 பேர் இடம்பெற்றுள்ளனர்.
சிக்கிம் மாநில எல்லையில் உள்ள டோக்கா லாம் என்ற பகுதிக்கு இந்தியா, சீனா, பூடான் ஆகிய 3 நாடுகளும் உரிமை கொண்டாடி வருகின்றன. இந்நிலையில், டோக்கா லாம் அருகே இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் மேற்கொண்டிருந்த சாலை அமைக்கும் பணியை இந்திய ராணுவம் கடந்த ஜூன் மாதம் 16-ஆம் தேதி தடுத்து நிறுத்தியது. அதிலிருந்து இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே 73 நாள்கள் போர்ப் பதற்றம் நீடித்தது.
பின்னர் இரு நாட்டு ராணுவமும் தங்களது படைகளை விலக்கிக் கொண்டதையடுத்து, பதற்றமான சூழல் முடிவுக்கு வந்தது.
இதனிடையே, வெளியுறவு விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுவை வெளியுறவு அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எஸ்.ஜெய்சங்கரும், தற்போதையச் செயலர் விஜய் கோகலேவும் அடிக்கடி சந்தித்து டோக்கா லாம் பிரச்னை பற்றி தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், இந்திய-சீன எல்லையில் கள நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அருணாசலப் பிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு நாடாளுமன்றக் குழு அடுத்த மாதம் செல்கிறது.
இந்தப் பயணத்தின்போது, இந்திய-சீன எல்லைப் பகுதியை விமானம் மூலம் இந்தக் குழு பார்வையிடும் என்று தெரிகிறது. மேலும், சீனப் படையினர் ஊடுருவிய பகுதிகளுக்கும் இந்தக் குழு செல்லும் என்று தெரிகிறது.
இவை தவிர, இரு மாநிலங்களிலும் எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புப் படையின் உயரதிகாரிகளுடன் இந்தக் குழு கலந்துரையாடுவதற்கு திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.