கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி - மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு

கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடியை வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.
கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடி - மத்திய உள்துறை அமைச்சர் அறிவிப்பு
Published on
Updated on
2 min read

கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடியை வழங்குவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

கேரள மாநிலம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வெள்ளத்தை சந்தித்துள்ளது. இதனால், அங்கு இதுவரை32 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதையடுத்து, அவர் டிவிட்டரில் கேரளாவுக்கு உடனடி நிவாரண நிதியாக ரூ.100 கோடியை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,   

"முன்னெப்போதும் இல்லாத அளவிலான வெள்ளத்தை கேரள மாநிலம் தற்போது எதிர்கொண்டு இருக்கிறது. சுதந்திர இந்தியாவில் கேரளா இதுமாதிரியான ஒரு மிகப் பெரிய வெள்ளத்தை கண்டதே இல்லை. இந்த வெள்ளம் நெல் உள்ளிட்ட பயிர்களை மிகவும் மோசமாக சேதப்படுத்தியுள்ளது. சாலைகளை, மின்சார கம்பிகளை மற்றும் தனிநபர் சொத்துகளை இந்த வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது. 

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம், அந்த மாநிலத்தின் சுற்றுலா துறையை மிகவும் பாதித்துள்ளது. அங்குள்ள 1 லட்சத்துக்கும் மேலானவர்களின் அன்றாட வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை இந்த வெள்ளம் ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நானும் நிவாரண முகாம்களுக்கு சென்று, அவர்களுடைய வேதனையை அறிந்தேன். 

இந்த கடினமான தருணத்தில் ஒட்டுமொத்த தேசமே கேரள மக்களுடன் நிற்க வேண்டும். அங்குள்ள சூழ்நிலையை மத்திய அரசு கூர்மையாக கவனித்து, முடிந்த உதவிகளை கேரளாவுக்கு செய்து வருகிறது. முன்னெப்போதும் இல்லாத இந்த சீரழிவை சரி செய்ய அனைத்தையும் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். 

இந்த சூழ்நிலையில் கேரளாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. மாநில பேரிடர் நிவாரணத் தொகையில் மத்திய அரசின் பங்கான 80.25 கோடியில் முதல் பகுதியை கடந்த மாதமே மத்திய அரசு வழங்கிவிட்டது. 

மாநில அரசின் நடவடிக்கைகளில் உதவும் வகையில், கேரளாவுக்கு புறப்படுவதற்கு முன்பே 80.25 கோடி ரூபாயின் 2-ஆவது பகுதிக்கு அனுமதி வழங்கிவிட்டேன். 

தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் 3 குழு இந்த பருவமழை காலத்திலேயே தயார்படுத்தப்பட்டது. மேலும் 11 தேசிய பேரிடர் மீட்புக் குழு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் தற்போது அங்கு 14 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணியில் உள்ளனர். தேவைப்பட்டால்  மீட்பு நடவடிக்கைகளுக்கு மேலும் பல குழு  கேரளாவுக்கு அனுப்பப்படும். 

இந்த பேரழிவால் கேரள மக்களின் வேதனையை உணர்கிறேன். இந்த சேதங்களை மதிப்பிடுவதற்கு சில காலம் ஆகும் என்பதால் உடனடி நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.100 கோடியை அறிவிக்கிறேன். இந்த மோசமான காலகட்டத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் கேரள அரசோடு அனைத்து அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஒன்றிணைந்து கைகோர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com