கேரள வெள்ளத்தின் போது மழை நீரில் சிக்கியவர்கள் தங்களைக் காப்பாற்றக் கோரி அழைப்பு விடுக்க பல்வேறு பகுதிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டன.
இதில் பத்தனம்திட்டா உதவி மையத்துக்கு மட்டும் 16 ஆயிரம் தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மொஹம்மது சஃபிருல்லா தெரிவித்துள்ளார்.
சுமார் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் கொண்டு ஒவ்வொரு உதவி மையங்களும் அமைக்கப்பட்டன. இங்குள்ள தொலைபேசிகளுக்கு, வெள்ளத்தில் சிக்கியிருப்போர் அவசரமாக தொடர்பு கொள்ளும்போது அவர்களது இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை பெற்றுக் கொண்டு அவற்றை மீட்புக் குழுவுக்குத் தெரிவிப்பது வழக்கம். அந்த வகையில் பத்தனம்திட்டாவில் இருந்து மட்டும் 16 ஆயிரம் பேர் இந்த உதவி மையத்தைப் பயன்படுத்தியதாகவும், அதில் 9 ஆயிரம் பேர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகக் கூறி மீட்புப் படையின் உதவியைக் கோரினர். 7 ஆயிரம் பேர் உணவு மற்றும் குடிநீர் கோரி அழைப்பு விடுத்திருந்தனர் என்று கூறப்படுகிறது.
இதில், மிகப்பெரிய சவால் என்னவென்றால், முதலில் யாரை மீட்பது என்பதை முடிவு செய்வதாகவே இருந்தது. பிறகு வீடு முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியவர்களுக்கும், நோயாளிகள், முதியவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டு அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மீட்புப் படையினருடன் மீனவர்கள் பலரும் பணியில் ஈடுபட்டதை வரவேற்பதாகவும், அவர்களுக்கு தனது பாராட்டுகளைக் கூறிக் கொள்வதாகவும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
கடந்த 4 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் சுமார் 3 லட்சம் உணவுப் பாக்கெட்டுகளை வீடுகளுக்குக் கொண்டு சென்று கொடுத்ததாகவும் அவர் கூறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.