ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் போது பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்களில் சோனியா, ராகுல் தலையீடு கிடையாது என முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி கூறினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
நான் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் அகஸ்டா வெஸ்ட்லாண்ட் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒப்பந்தங்களில் சோனியா மற்றும் ராகுல் ஆகியோரின் தலையீடு எப்போதும் இருந்ததில்லை. அகஸ்டா வெஸ்லாண்ட் குறித்து அதற்காக நிர்ணயிக்கப்பட்ட குழு ஆய்வு செய்த பின்னர் தான் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என்று தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பயணிப்பதற்காக, இத்தாலியைச் சேர்ந்த ஃபின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ.3,100 கோடி மதிப்பில் 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு மத்திய அரசு கடந்த 2010-இல் ஒப்பந்தம் மேற்கொண்டது.
இந்த ஒப்பந்தத்துக்காக, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனம் சார்பில் இந்திய தரப்புக்கு ரூ.423 கோடி வரை லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 2014-இல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இடைத்தரகர்களாக செயல்பட்டதன் மூலமாக லஞ்சப் பணத்தில் பங்கு பெற்றதாக மிஷெல், குய்டோ ஹசாகே, கர்லோ கெரோஸா ஆகிய 3 பேர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதில் தலைமறைவாக இருந்த மிஷெல், துபையில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










