மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை விற்பனை செய்வதற்கு தலைமைத் தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாட்டுக்கு மாநில தேர்தல் ஆணையங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தலைமைத் தேர்தல் ஆணையத்துக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்(பிஇஎல்) நிறுவனமும், எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (எல்காட்) நிறுவனமும் தயாரித்து அளித்து வருகின்றன.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு மே மாதம் ஒரு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், ''தலைமைத் தேர்தல் ஆணையத்தின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களின் வடிவமைப்புக்கு தொழில்நுட்ப நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலின்றி, மாநில தேர்தல் ஆணையம் உள்பட வேறு எந்த தேர்தல் அமைப்புக்கும் வாக்குப் பதிவு இயந்திரங்களை விற்பனை செய்யக் கூடாது'' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையங்களின் கூட்டம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 8-9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் பெரும்பாலான மாநிலங்களின் தேர்தல் ஆணையர்கள் கலந்து கொண்டனர்.
அந்தக் கூட்டத்தில், வாக்குப் பதிவு இயந்திரங்களை விற்பனை செய்வதற்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்ததற்கு மாநில தேர்தல் ஆணையர்கள் கவலை தெரிவித்தனர். தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்தக் கட்டுப்பாடு, வாக்காளர் மத்தியிலும், அரசியல் கட்சிகளின் மத்தியிலும் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும்; வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மையையும் குலைத்துவிடும் என்று அவர்கள் கூறினர்.
தலைமைத் தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடைமுறையும், மாநில தேர்தல் ஆணையத்தின் நடைமுறையும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, தலைமைத் தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்? என்று புரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்பதற்கு அவர்கள் முடிவு செய்தனர். இந்தத் தகவல்களை, போபால் நகரைச் சேர்ந்த அஜய் துபே என்ற சமூக ஆர்வலர், தகவல் உரிமை பெறும் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.