வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த பலம் வாய்ந்த கூட்டணி அமைப்பது அவசியம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற சோனியா கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் இதர மூத்த தலைவர்களுடன் நான் தொடர்ந்து பக்கபலமாக இருப்பேன். வருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்துவதற்கு ஒரே கருத்துடைய அனைத்து கட்சிகளுடனும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைப்பது அவசியமாகும்.
எனவே எதிர்கட்சிகள் ஒன்றிணைய இதுவே சரியான தருணம் என்று நான் கருதுகிறேன். அப்போதுதான், ஜனநாயகம் காக்கப்படும், நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி பயணிக்க முடியும், சிறுபான்மையினர் நலன் பாதுகாப்பாக இருக்கும்.
பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 4 ஆண்டுகளில் சர்வாதிகாரப் போக்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக ஊடகத்தின் குரல் நசுக்கப்பட்டுள்ளது. சாமானிய மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது. எதிர்கட்சிகளுக்கு எதிரான அனைத்து வகையிலான தாக்குதலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன.
இத்தனை சோதனைகளுக்கு இடையிலும் குஜராத் தேர்தல் மற்றும் ராஜஸ்தான் இடைத்தேர்தலில் காங்கிரஸின் செயல்பாடு பிரமிக்க வைத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியினரின் கடின உழைப்பு பாராட்டுக்குரியது. அதேபோன்று வருகிற ஏப்ரல்-மே மாதங்களில் கர்நாடகாவில் நடைபெறும் தேர்தலிலும் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது நமக்கு புதிய காங்கிரஸ் தலைவர் கிடைத்துள்ளார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் என்கிற முறையிலும், ராகுலின் தாய் என்னும் உரிமையுடனும் அவர் அனைத்திலும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
தற்போது நானும் உங்களைப் போன்ற ஒரு சாதாராண காங்கிரஸ் தொண்டர் தான். இனி ராகுல் தான் எனக்கும் தலைவர் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம் என்றார்.