சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை என்ன?: சொராபுதீன் வழக்கில் சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று சிபிஐ அமைப்பிடம் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சாட்சிகளைப் பாதுகாக்க நடவடிக்கை என்ன?: சொராபுதீன் வழக்கில் சிபிஐக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
Updated on
1 min read

சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கில் தொடர்புடைய சாட்சிகளை பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன? என்று சிபிஐ அமைப்பிடம் மும்பை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வழக்கில் தொடர்புடைய சிலர் பிறழ் சாட்சியம் அளித்ததை அடுத்து, இவ்வாறு உயர் நீதிமன்றம் கேட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சொராபுதீன், அவரது மனைவி கெளசர் பாய், அவர்களின் கூட்டாளிகள் துளசிதாஸ் பிரஜாபதி ஆகியோர் கடந்த 2005-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் மூவரும், லஷ்கர் அமைப்பின் பயங்கரவாதிகள் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சொராபுதீன் உள்ளிட்டோர் போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டதாகவும், அந்தச் சம்பவத்தில், காவல் துறை உயரதிகாரிகள், அப்போதைய மாநில உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷா ஆகியோருக்குத் தொடர்பு இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அதனை விசாரித்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அமித்ஷா உள்ளிட்ட சிலரை வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று சிபிஐ முடிவு செய்தது. இந்நிலையில், சிபிஐ அமைப்பின் முடிவுக்கு எதிராக மும்பை வழக்குரைஞர்கள் சங்கத்தினர் பொது நல மனுவொன்றைத் தாக்கல் செய்தனர். இது ஒருபுறமிருக்க, வழக்கில் இருந்து போலீஸ் அதிகாரிகள் டி.ஜி.வன்சாரா, ராஜ்குமார் பாண்டியன், எம்.என்.தினேஷ் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சொராபுதீனின் சகோதரர் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதேபோன்று வேறு சில காவலர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுக்கள், நீதிபதி ரேவதி மொஹிதி தேரே முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சில சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்தனர். இதையடுத்து, நீதிபதி கூறியதாவது: 
வழக்கு தொடர்பாக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வது மட்டும் சிபிஐ அமைப்பின் கடமை கிடையாது. சாட்சிகள் பயமின்றி தகவல்களைத் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பும் சிபிஐக்கு உள்ளது. அதற்காக என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றார் நீதிபதி.
சொராபுதீன் வழக்கில் விரைந்து தீர்வு காணும் நோக்கில், அதை நாள்தோறும் விசாரிக்கப் போவதாக மும்பை உயர் நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com