இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் இன்று செய்தியாளர்களை சந்தித்து, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா குறித்து குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
அப்போது, இந்த விவகாரம் குறித்து தலைமை நீதிபதிக்கு சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கடிதத்தையும் அவர்கள் செய்தியாளர்களுக்கு வழங்கினர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
நீதிபதிகளுக்கு பணி ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. விதிகளையோ, நடைமுறைகளையோ பின்பற்றாமல் தலைமை நீதிபதி முடிவு எடுக்கிறார். அரசியல் சாசனம் தொடர்பான முக்கிய வழக்குகளை மூத்த நீதிபதிகளுக்கு தர மறுப்பு தெரிவிக்கிறார்.
முக்கிய வழக்குகள் அனுபவமற்ற நீதிபதிகளுக்கே தரப்படுகிறது. தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நீக்குவது குறித்து நாட்டு மக்கள்தான் சிந்திக்க வேண்டும் என்றும் கூறினர்.
இவ்விகாரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
முதன்முறையாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் கூறியுள்ளது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.
அமித்ஷா மீதான போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோதா மரணம் குறித்தும் உயர்மட்ட அளவிலான சுதந்திரமான விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜனநாயகம் குறித்த நீதிபதிகளின் கருத்து கவனிக்கப்பட வேண்டியதே நீதியை விரும்புவோரின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றார்.