ராஜஸ்தான் மாநிலம், அல்வர் மாவட்டத்தில் பசுக்களை கடத்திச் சென்றதாகக் கூறி இளைஞரை 5 பேர் கும்பல் அடித்துக் கொலை செய்தது தொடர்பாக அந்த மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டுள்ளது.
அல்வர் விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், ராஜஸ்தான் மாநில அரசு கூடிய விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அக்பர் கான் (28) என்பவர் 2 மாடுகளை வாங்கிக் கொண்டு ஹரியாணாவில் உள்ள தனது சொந்த கிராமத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு அல்வர் மாவட்டம் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது, பசுக்களை கடத்திச் சென்றதாக சந்தேகித்து, அவரை ஒரு கும்பல் இடைமறித்து தாக்கியது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார்.
உயரதிகாரக் குழு விசாரணை: இதனிடையே, அல்வர் சம்பவத்தில் அக்பர் கானை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக விசாரிக்க ராஜஸ்தான் காவல்துறை, 4 அதிகாரிகளைக் கொண்ட உயரதிகாரக் குழு ஒன்றை அமைத்துள்ளது. மேலும், அல்வர் கும்பல் கொலை தொடர்பான வழக்கு விசாரணை அல்வர் மாவட்ட காவல்துறையிடம் இருந்து, ஜெய்ப்பூர் சரக காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









