வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இருக்கும் இந்தியர்களுக்கு சொந்தமான கருப்புப் பணம் குறித்து அளிக்கப்பட்ட 3 அறிக்கைகளை பகிர்ந்து கொள்ள மத்திய அரசு மறுத்து விட்டது.
மத்தியில் முன்பு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசால், கருப்புப் பணம் குறித்து ஆய்வு நடத்த தில்லியைச் சேர்ந்த 2 நிறுவனங்களும், பரிதாபாதை சேர்ந்த ஒரு நிறுவனமும் அமர்த்தப்பட்டன. அந்த 3 நிறுவனங்களும் தங்களது அறிக்கைகளை மத்திய அரசிடம் அளித்துள்ளன. அந்த அறிக்கைகளின் நகல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மத்திய நிதியமைச்சகத்திடம் பிடிஐ செய்தியாளர் கோரியிருந்தார்.
இதற்கு மத்திய நிதியமைச்சகம் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தில்லியைச் சேர்ந்த என்.ஐ.பி.எஃப்.ஏ.பி., என்.சி.ஏ.இ.ஆர். ஆகிய நிறுவனங்களும், பரிதாபாதைச் சேர்ந்த என்.ஐ.எஃப்.எம். நிறுவனமும் தங்களது அறிக்கைகளை மத்திய அரசிடம் முறையே கடந்த 2013ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி, 2014ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி ஆகிய நாள்களில் தாக்கல் செய்தன.
இந்த அறிக்கைகள், நிதித்துறைக்கான நிலைக்குழுவிடம் கடந்த ஆண்டு 21ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த அறிக்கைகளை நிதித்துறைக்கான நிலைக்குழு ஆய்வு செய்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், அறிக்கைகள் தொடர்பான நகல்களை வெளியிடுவது என்பது நாடாளுமன்றத்தின் உரிமையை மீறும் செயலாகும். அதுமட்டுமில்லாமல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 8(1)(சி) பிரிவின்கீழ், இந்த தகவலை அளிப்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் இந்தியர்களால் எவ்வளவு கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல், மத்திய அரசிடம் இல்லை.
இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த குளோபல் பினான்சியல் இன்டகிரிட்டி அமைப்பு வெளியிட்ட ஆய்வுத் தகவலில், 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையில், இந்தியாவுக்குள் சுமார் ரூ.52.97 லட்சம் கோடி (770 பில்லியன் டாலர்) மதிப்புக்கு கருப்பு பணம் வந்திருப்பதாகவும், அதே காலக்கட்டத்தில் சுமார் ரூ.11.35 லட்சம் கோடி கருப்பு பணம், நாட்டை விட்டு வெளியேறி இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








