அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை செவ்வாய்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு
Published on
Updated on
1 min read

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு விவகாரத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை செவ்வாய்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. 

அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில், 40 லட்சம் மக்களின் பெயர்கள் விடுபட்டது. அதனால், அசாம் மாநிலத்தில் சற்று பாதுகாப்பற்ற சூழ்நிலை ஏற்பட்டது. இந்த விவகாரத்தை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை முதல் ஆளும் அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தனர். 

மாநிலங்களவை திங்கள்கிழமை கூடிய போதும் எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாநிலங்களவை செவ்வாய்கிழமை கூடியது. அப்போது, பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா எதிர்க்கட்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் கூறியதாவது, 

"இந்த அசாம் உடன்படிக்கையில் ராஜீவ் காந்தி ஆகஸ்ட் 14, 1985-இல் கையெழுத்திட்டார். அதை அடுத்த தினம் செங்கோட்டையில் பிரதமர் உரையின் போது அவர் அறிவித்தார். இந்த உடன்படிக்கையின் குறிக்கோள் என்பது வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை அடையாளம் காண்பது. அதை அமல்படுத்த உங்களுக்கு தைரியம் இல்லை. எங்களுக்கு தைரியம் இருக்கிறது, நாங்கள் அமல்படுத்துகிறோம். 

அனைவரும் 40 லட்ச மக்கள் குறித்து கவலைப்படுகிறார்கள். இந்த 40 லட்ச மக்களில் வங்கதேச இருந்து ஊடுருவியவர்கள் எத்தனை பேர்? யாரை பாதுகாக்க நீங்கள் விரும்புகிறீர்கள்? வங்கதேசத்தில் இருந்து ஊடுருவியவர்களை பாதுகாக்க விரும்புகிறீர்களா?" என்றார்.  

அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவை உறுப்பினர்கள் அவைத்தலைவர் இருக்கையை நோக்கி சென்று அமளியில் ஈடுபட்டனர். 

இதனால், அவைத்தலைவர் அவையை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அதன்பிறகுமதியம் 1.10 மணிக்கு அவை மீண்டும் கூடியது. ஆனால், அப்போதும் மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை முழுவதும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தார்.  

இதைத்தொடர்ந்து, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத்தை தனது அறைக்கு அழைத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு வெங்கய்யா நாயுடு வருத்தத்தை தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com