லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த தலித் பெண் எம்.எல்.ஏ. ஒருவரின் வருகைக்குப் பிறகு கோவில் சுத்தப்படுத்தப்பட்ட விவகாரம் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள முஸ்கரா குர்த் கிராமத்தில் த்ரும் ரிஷி கோவில் உள்ளது. மகாபாரத காலத்தில் இருந்து இருப்பதாக கூறப்படும் இந்த் கோவிலுக்குள் பெண்கள் செல்லக் கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளூர்வாசிகளால் பின்பற்றப்படுகிறது. அப்படி மீறி நுழைந்தால் அந்த கோவில் மாசுபட்டு விடும் என்ற நம்பிக்கையுள்ளது.
இந்த தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் மனிஷா அனுராக் .தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர் கடந்த 12-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றிருந்த பொழுது அந்த கோவிலுக்கு வருகை புரிந்துள்ளார்.
ஆனால் அவர் வந்து சென்ற பிறகு அந்த கோவிலானது புனிதநீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கோவில் சிலைகள் அனைத்தும் அருகில் உள்ள பிரயாகை நகருக்கு தோஷம் நீக்குவதற்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்த தகவல் வெளியாகி தற்பொழுது பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த மனிஷா அனுராக் இது பெண்களை அவமதிக்கும் செயல் என்றும், அரைகுறை அறிவுள்ளவர்களின் நடவடிக்கையென்றும் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அதேசமயம் குறிப்பிட்ட அந்த கோவிலின் பூசாரி பேசும் பொழுது கூறியதாவது:
இதுவரை அந்த கோவிலுக்குள் பெண்கள் யாரும் நுழைந்தது இல்லை.அவர் வரும் பொழுது நான் அங்கு இல்லை. இருந்திருந்தால் அவரை உள்ளே அனுமதித்திருக்க மாட்டேன். அவர் வந்து சென்ற பிறகு கிராமத்திற்கு கெட்ட நேரம் சூழ்ந்துள்ளது. அதன் பின் தொடர்ச்சியாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.