புதுதில்லி: சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின் நோய்த் தொற்றைத் தவிர்க்க, மூன்று வாரமாக மருத்துவமனையில் இருந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி திங்களன்று வீடு திரும்பினார்
மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தொடர்ந்து சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். பின்னர் அவருக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கலாம் என்பதால், அவர் கடந்த 3 வாரங்களாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் மூன்று வாரமாக மருத்துவமனையில் இருந்த மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி திங்களன்று வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய அவர் தான் மருத்துவமனையில் இருந்த போது தன்னைக் கவனித்து கொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
வீட்டிற்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த மூன்று வாரங்களாக என்னைக் கவனித்துக்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பூரண உடல்நலம் பெறும் வரை வீட்டிலேயே ஓய்வு எடுக்க வேண்டும் என்று அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.