எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி
Updated on
1 min read

அரசுப் பணிகளில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்சி, எஸ்டி) இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. சட்டவிதிகளுக்கு உட்பட்டு அந்த நடைமுறையைச் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் இந்த விவகாரத்தில் இவ்வளவு நாள்களாக மத்திய அரசு எதிர்கொண்டு வந்த சிக்கல்களுக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது.
பொதுவாக, அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் இடஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன. அதேவேளையில் ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பதவி உயர்வு வழங்கும்போது அந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை. மாறாக, சம்பந்தப்பட்டவர்களின் செயல் திறன் மற்றும் பணி மூப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.
இருப்பினும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு மட்டும் அதில் விதிவிலக்கு வழங்கப்பட்டிருந்தது. அதாவது, அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் உயர் பதவிகளுக்கு வர வேண்டும் என்ற மத்திய அரசின் கொள்கை முடிவு காரணமாக, எஸ்சி, எஸ்டி ஊழியர்களுக்கு மட்டும் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. 
இதனிடையே, அந்த நடைமுறைக்கு எதிராகவும், ஆதராகவும் வெவ்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மும்பை - பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன. ஒருபுறம் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறைக்கு ஆதரவாகவும், மறுபுறம் எதிராகவும் உத்தரவுகள் வெளியாகின.
இதற்கு நடுவே தில்லி உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் முறையை ரத்து செய்தது. இத்தகைய முரண்பட்ட தீர்ப்புகளால் அந்த வகுப்பினருக்கு பதவி உயர்வு அளிப்பதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அது, நீதிபதிகள் ஏ.கே. கோயல், அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய விடுமுறைக் கால அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணீந்தர் சிங், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே நடைபெற்ற வழக்குகளையும், அவற்றின் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டினார். அரசமைப்பு அதிகாரப்படி பதவி உயர்வு வழங்குவதில், மத்திய அரசு தாம் விரும்பிய நடைமுறையைப் பின்பற்ற அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதையடுத்து எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் சட்ட விதிகளுக்குட்பட்டு இடஒதுக்கீடு அளிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com