சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் சசி தரூர்-க்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்கிழமை சம்மன் பிறப்பித்தது.
சசி தரூர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ஆம் தேதி தில்லி நட்சத்திர விடுதியில் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பான வழக்கு தில்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் மே 14-ஆம் தேதி இந்த மரணத்தில் தொடர்பு இருப்பதாக கூறி சசி தரூர் மீது தில்லி காவல்துறை 306 மற்றும் 498ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. இருப்பினும் இது வேண்டுமென்றே தொடுக்கப்பட்ட வழக்கு என்று சசி தரூர் பதிலளித்தார்.
அதுபோல, சசி தரூர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் இந்த வழக்கு தொடர்பாக அரசியல் தலைவர்களுக்கான நீதிமன்றத்துக்கு தில்லி நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதன் விசாரணை மே 28-ஆம் தேதி நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஜுலை 7-ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சசி தரூர்-க்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.