தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வயதானவர்களுக்கான தனி மையம் அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த நான்கு ஆண்டுகளில் நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை சிறந்த வளர்ச்சியை பெற்று வருகிறது. மருத்துவ துறையில் தரமான உள்கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு இத்துறையில் எடுத்து வரும் நடவடிக்கைகளால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கப்பெறுகிறது.
எய்ம்ஸ் மருத்துவமனையை மேம்படுத்த மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக உலகளவில் சிறந்த மருத்துவமனையாக எய்ம்ஸ் உருவெடுக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதுபோல நாடு முழுதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 மருத்துவமனைகள் கட்டுமானப்பணி நடைபெற்று வருகின்றன. 58 மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளை, மருத்துவக் கல்லூரிகளாக தரம் உயர்த்தியுள்ளோம்.
2025-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் காசநோயை ஒழிக்க வேண்டும் என்பதே தற்போதைய இலக்கு. அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய இந்தியா திட்டத்தின் அடிப்படையில் நாடு முழுவதும் அனைவருக்கும் சிறந்த மருத்துவ வசதி ஏற்படுத்தப்படும் என்றார்.