அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எஸ்சி/எஸ்டி வன்கொடுமை சட்டம் குறித்த தீர்ப்பு: மத்திய அரசு அடுத்த வாரம் மறுஆய்வு மனு

எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் உடனடிக் கைது நடவடிக்கைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அடுத்த வாரம் மறுஆய்வு மனுவைத்

Updated On :29 மார்ச் 2018, 7:40 pm

எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் உடனடிக் கைது நடவடிக்கைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு அடுத்த வாரம் மறுஆய்வு மனுவைத் தாக்கல் செய்ய உள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் 'இந்த விவகாரத்தில் விரிவான மறுஆய்வு மனுவை தயாரிக்க சமூக நீதி அமைச்சகத்தின் அதிகாரிகள், மூத்த வழக்குரைஞர்களுடன் தொடர்ந்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். மறு ஆய்வு மனு அடுத்த புதன்கிழமை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதற்குள் மறு ஆய்வுக்கான காரணங்களை விளக்கி மனு தயாராகி விடும்' என்று தெரிவித்தன.
இந்த விவகாரம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், 'எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டம் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுத்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அரசு கவனத்தில் கொண்டுள்ளது. இது தொடர்பாக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக பரிசீலிக்குமாறு எனது அமைச்சக அதிகாரிகளுக்கு நான் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன' என்றார்.
மேற்கண்ட சட்டத்தின்கீழ் ஒரு அரசு ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டால் அவரை உடனே கைது செய்யலாம் என்று ஷரத்து முன்பு இருந்தது. எனினும், சம்பந்தப்பட்ட ஊழியரின் உயரதிகாரி அனுமதி இல்லாமல் கைதுசெய்யக் கூடாது உள்ளிட்ட புதிய விதிமுறைகளைச் சேர்த்து உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பானது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஷரத்துகளை நீர்த்துப் போகச் செய்வதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
இத்தீர்ப்பு தொடர்பாக விவாதிப்பதற்காக மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சமூக நீதித்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் ஆகியோர் தலைமையில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் பிரதமர் மோடியை புதன்கிழமை சந்தித்தனர். 
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனு தாக்கல் செய்வது தொடர்பாக தாவர் சந்த் கெலாட் அண்மையில் ரவிசங்கர் பிரசாத்துக்கு கடிதம் எழுதியிருந்தார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பானது தலித்துகளுக்கும் பழங்குடி இனத்தவருக்கும் நீதி வழங்கப்படுவதை பாதிக்கும் என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.