எடியூரப்பா பதவியேற்பு: ராம்ஜெத்மலானியின் கோரிக்கையை நிராகரித்தார் தீபக் மிஸ்ரா
கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக காங்கிரஸ்-மஜத கட்சிகள் கூட்டாக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக நேற்று (புதன்கிழமை) இரவு மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.
அதன்படி அந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக ஏற்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணிக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.போப்தே ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்க தடையில்லை என்றும், இந்த வழக்கு குறித்து விரிவான விசரணைக்குப் பிறகு தான் முடிவு எடுக்க முடியும் என்றும், எடியூரப்பா தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடிதத்தை மதியம் 2 மணிக்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார். மேலும் எடியூரப்பாவின் பதவியேற்பு இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தனர்.
இதையடுத்து, எடியூரப்பா இன்று காலை முதல்வராக பதவியேற்றார்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் எடியூரப்பாவை ஆட்சி அமைக்கக் கோரிய கர்நாடக ஆளுநரின் முடிவுக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் அவர், இந்த வழக்கை எந்த கட்சியின் பிரநிதியாக இல்லாமல் தாமாக முன் வந்து வாதிடுவதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இதே வழக்கு நாளை வேறு ஒரு அமர்வில் விசாரணைக்கு வருகிறது. அந்த விசாரணையின் போது ஆஜராகுங்கள் என்று கூறி ராம்ஜெத்மலானியின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

