செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

ஆந்திர விரைவு ரயிலில் தீ விபத்து: பயணிகள் உயிர் தப்பினர்

தில்லி - விசாகப்பட்டினம் இடையே பயணித்துக் கொண்டிருந்த ஆந்திரப் பிரதேச விரைவு ரயிலில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து இரு குளிர்சாதனப் பெட்டிகளில் வேகமாக தீ பரவியதால் பயணிகள் செய்வதறியாது

News image

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் அருகே தீ விபத்துக்குள்ளான ஏ.பி. விரைவு ரயில்.

Updated On :21 மே 2018, 7:07 pm

தில்லி - விசாகப்பட்டினம் இடையே பயணித்துக் கொண்டிருந்த ஆந்திரப் பிரதேச விரைவு ரயிலில் திங்கள்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து இரு குளிர்சாதனப் பெட்டிகளில் வேகமாக தீ பரவியதால் பயணிகள் செய்வதறியாது கூச்சலிட்டனர்.
இதையடுத்து ரயிலை அவசரமாக நிறுத்தி அதில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். அதிருஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. 
தீ விபத்துக்குக் காரணம் மின் கசிவாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திரப் பிரதேச அதிவிரைவு ரயில், தில்லியில் இருந்து விசாகப்பட்டினம் நோக்கி திங்கள்கிழமை சென்று கொண்டிருந்தது. 
மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியரில் உள்ள பிர்லாநகர் அருகே ரயில் சென்றபோது இரண்டாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, அதற்கு அடுத்த பெட்டியிலும் தீ வேகமாகப் பரவியது.
தீ விபத்து ஏற்பட்டதை அறிந்த பயணிகள் துரிதமாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 
இதனிடையே, 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. சில மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் 37 சார் - ஆட்சியர்கள் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ரயில்வே உயரதிகாரிகள், தீ விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.