

போபால்: முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியை, பிரதமர் மோடியுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம் என்று அவரது மகனும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அனில் சாஸ்திரி கேட்டுக் கொண்டுள்ளார்.
போபாலில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனில் சாஸ்திரியிடம், யார் சிறந்த பிரதமர், லால் பகதூர் சாஸ்திரியா அல்லது தற்போதைய பிரதமர் மோடியா? என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அனில் சாஸ்திரி, எனது தந்தையை பிரதமர் மோடியுடன் ஒப்பிட வேண்டாம். காதி ஆடைகளையும், குர்தாவையும்தான் என் தந்தை விரும்பி அணிவார். ஆனால் தற்போதைய பிரதமர் மோடி ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆடைகளையே விரும்புகிறார் என்று கூறினார்.
மேலும், 1960ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவத்தையும் அவர் நினைவு கூர்ந்தார்.
அதாவது, என் தந்தை பிரதமரானதும், ஒரு கார் வாங்குமாறு கூறினோம். அவரும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.5 ஆயிரம் கடன் பெற்று கார் வாங்கினார். ஆனால் சில மாதங்களிலேயே அவர் இறந்துவிட்டார். கடனை செலுத்தாமல் அவர் இறந்து விட்டதால், அந்த கடன் தொகையை எனது தாய், தனக்குக் கிடைத்த ஓய்வூதியத் தொகையில் இருந்து செலுத்தி கடனை அடைத்தார்.
ஆனால், தற்போதைய பிரதமர் மோடி ஆட்சியில், நீரவ் மோடி அதே வங்கியில் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்குக் கடன் பெற்றுவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடியுள்ளார் என்று அனில் சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.