கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை தொடர் உயர்வு ஏற்பட்டு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 81.35 மற்றும் டீசல் ரூ. 73.12 விற்கப்படுகிறது.
தினமும் உயர்வை கண்ட பெட்ரோல், டீசல் விலையில் 16 நாட்களுக்குப் பின்னர் புதன்கிழமை 1 பைசா குறைக்கப்பட்டது. இதை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. இதனிடையே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை விரைவில் ஜிஎஸ்டி-க்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு வருவதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், விலை குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
மக்கள் அவதிப்படாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை விரைவில் கட்டுப்படுத்தி, குறைப்பதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாகவே பெட்ரோல், டீசல் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை என்றார்.