இந்தோனேஷியாவில் கடந்த வெள்ளிக்கிழமை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து சுனாமி என அடுத்தடுத்து இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவுகோலில் 7.5 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், 10 கி.மீ. ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மாலை 6 மணிக்கு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 1.5 மீட்டர் உயரத்துக்கு சுனாமி அலை ஏற்பட்டது.
இப்பேரழிவு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,234 - ஆக அதிகரித்துள்ளது. மேலும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பேரழிவு மீட்புப் பணிகளுக்கு இந்திய விமானப் படை சார்பில் மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்யப்படவுள்ளது. இதில் சி-130ஜே மற்றும் சி-17 ஆகிய இரு விமானங்களில் 37 பேர் அடங்கிய மருத்துவக் குழுவுடன் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய நிவாரணப் பொருட்களுடன் அனுப்பப்பட்டுள்ளது.