திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதென்று நாயர் சேவை சமூகம் முடிவு செய்துள்ளது.
கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் மட்டுமே செல்ல அனுமதி இருந்தது. இந்த வழைப்பாட்டு நடை முறையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இளம் வழக்கறிஞர்கள் அமைப்பின் சார்பில் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் நுழையலாம் என்ற தீர்ப்பை அளித்தது. இந்த தீர்ப்புக்கு சில இந்து அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் இதற்கு எதிராக குரல் கொடுத்தன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கேரள மாநில அரசு முறையீடு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று கேரள மாநில அரசும் , சபரிமலை கோவிலின் தேவசம்போர்டும்மறுப்பு தெரிவித்து விட்டன.
இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து மறுஆய்வு மனு தாக்கல் செய்வதென்று நாயர் சேவை சமூகம் முடிவு செய்துள்ளது.
கேரளாவின் செல்வாக்கு பெற்ற அமைப்பான நாயர் சேவை சமூகத்தின் பொதுச்செயலாளர் சுகுமாரன் நாயர் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தேவசம்போர்டு மறுஆய்வு மனு அளிக்காது இருப்பது விரக்தி அளிக்கிறது. எனவே அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.