புது தில்லி: தொடர்ந்து 11-வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார்.
பிரபல பத்திரிக்கையான போர்பஸ் இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை ஒவ்வொரு வருடமும் வெளியிடுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டிலும் இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில் முதலாவது இடத்தை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார். அம்பானியின் சொத்து மதிப்புகள் சுமார் 47.3 பில்லியன் டாலர்கள் ஆகும். இந்த வருடம் மட்டும் அவரின் சொத்து மதிப்பு சுமார் 9.3 பில்லியன் டாலர்கள் அதிகரித்திருக்கிறது.
அதேபோல இந்த ஆண்டும் இரண்டாம் இடத்தில் விப்ரோ தலைவர் அஸிம் பிரேம்ஜி உள்ளார். அவரின் சொத்து மதிப்பு சுமார் 21 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
அர்செலோர் மெட்டல் குழுமத்தின் தலைவர் லக்ஷ்மி மித்தல் 18.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்து மதிப்புடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் ஹிந்துஜா சகோதரர்கள், பல்லோஜி மிஸ்ட்ரி, தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார், கோத்ரேஜ் குழுமம், திலீப் சங்வி, குமார் பிர்லா மற்றும் கௌதம் அதானி உள்ளனர். 100 பேர் கொண்ட பட்டியலில் இந்த ஆண்டு 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர்.
தொடர்ந்து 11-வது ஆண்டாக இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.