
புதுதில்லி: சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா இல்லத்துக்கு வெளியே இருந்த அதிகாரிகள் உளவு பார்க்க அனுப்பப்படவில்லை என்று நுண்ணறிவுப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
சமீபகாலமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கும், சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. தனது விசாரணை நடவடிக்கைகளில் அலோக் வர்மா தலையிடுவதாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தில் அஸ்தானா புகாரளித்திருந்தார். அதேசமயம் வழக்கு ஒன்றில் தொழிலதிபரிடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
சிபிஐ இயக்குநர்கள் இடையே ஏற்பட்ட இந்த சச்சரவின் காரணமாக சிபிஐ இணை இயக்குநராக இருந்த நாகேஸ்வர் ராவிற்கு சிபிஐ இயக்குநராக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இருவரையும் கட்டாய விடுப்பில் செல்லுமாறு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தில்லியில் வியாழனன்று சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவின் இல்லத்திற்கு வெளியே மத்திய அரசின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் நான்கு பேர் உளவு பார்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா இல்லத்துக்கு வெளியே இருந்த அதிகாரிகள் உளவு பார்க்க அனுப்பபடவில்லை என்று நுண்ணறிவுப் பிரிவு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக அத்துறை சார்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது அமைதி தொடர்பான பல்வேறு விஷயங்களை தகவல் சேகரிக்க வேண்டிய பொறுப்பு நுண்ணறிவுப் பிரிவுக்கு இருக்கிறது. பதற்றமான பகுதிகளில் தகவல் சேகரிக்க வேண்டி அதிகாரிகள் நியமிக்கப்படுவது வழக்கமான் ஒன்றுதான். சமயங்களில் உள்ளூர் காவல்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து இத்தகைய பணிகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பிட்ட சம்பவத்தில் சுட்டிக் காட்டப்படுபவர்கள் அனைவரும் அங்கு வழக்கமாக பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்தான். அவர்கள் தங்கள் அடையாள அட்டைகளைக் கூட அணிந்திருந்தார்கள். இது ரகசியமாக அடையாளம் தெரியாமல் செய்யப்படும் உளவுப் பணியல்ல.
சம்பந்தப்பட்ட ஜன்பத் சாலைப்பகுதி என்பது உயர் பாதுகாப்பு வளையத்தில் இருப்பவர்கள் வசிக்கும் பகுதியாகும். அப்பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிலர் கூடியிருந்த காரணத்தால் அவர்களை விசாரிக்கவே அதிகாரிகள் சென்றுள்ளனர். ஆனால் இது வேறுவிதமாக மாற்றிக் கூறப்பட்டு விட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.