புது தில்லி: மத்திய பாரதிய ஜனதா அரசு தனது எல்லைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் சார்பில் திங்களன்று 'பாரத் பந்த்' நடத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தில்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த கூட்டத்தில் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பேசியதாவது:
நமது தேசத்தின் நலனுக்கு விரோதமான பல்வேறு விஷயங்களை மோடி அரசு செய்திருக்கிறது. அவர்கள் தங்களது எல்லைகளை மீறிச் செயல்படுகின்றனர். இந்த அரசை மாற்ற வேண்டிய நேரம் விரைவில் வரும்.
விவசாயிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை பலரும் இன்று கவலையில் ஆழ்ந்துள்ளார்கள். போதுமான வேலை வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளார்கள்.
மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது. தங்களது பழைய வேறுபாடுகளை மறந்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைவதே இப்போதைய தேவையாகு ம். நாட்டின் ஒற்றுமையைக் காக்க நாம் தயாராக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.