புது தில்லி: அடுத்த இரண்டு வாரங்களுக்கு மத்திய அரசு ஊழியர்கள் அவர்களது குடும்பத்துடன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என்று பணியாளர் துறை சுற்றறிக்கை விடுத்துள்ளது.
'ஸ்வச் பாரத்' இயக்கத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வரும் அக்டோபர் 2-தேதியோடு 4 ஆண்டுகள் நிறைவடைகிறது. அத்துடன் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் வர உள்ளது. எனவே பிரதமர் மோடி 'ஸ்வச்தா ஹி சேவா' என்ற இயக்கத்தை இம்மாதம் 15-ம் தேதி தொடங்கினார். அக்டோபர் 2-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்குமாறு இது வடிவமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரப்பணியில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் அந்தப் பணியில் ஈடுபட செய்வதே இந்த இயக்கத்தின் நோக்கமாகும்.
இது தொடர்பாக மத்திய பணியாளர் வாரியம் அனைத்து அரசுத் துறைகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
அனைத்துத்துறைகளிலும், அமைச்சகங்களின் பணியாற்றும் ஊழியர்களும், அதிகாரிகளும் 'ஸ்வச்தா ஷர்மாதான்' திட்டத்தில் பங்கேற்க வேண்டும். அலுவலகங்கள், அலுவலக வளாகங்கள், குடியிருப்புகள், பொதுக்கழிப்பறைகளை சுத்தம் செய்தல், குப்பைகளைச் சேகரித்தல், விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகிய பணிகளை அரசு ஊழியர்கள் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்கள் மட்டுமல்லாது அவர்களின் குடும்பத்தினர் அனைவரும் குறைந்தபட்சம் அடுத்த 2 வாரங்களுக்கு 6 மணி நேரம் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.