ராஜீவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்பது? உச்ச நீதிமன்றம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ராஜீவ் கொலையில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்பது? உச்ச நீதிமன்றம்


புது தில்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. 

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துக் காட்டி அவரது வழக்குரைஞரிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பில்லை என்பதை எப்படி ஏற்க முடியும்? பேரறிவாளனின் வாக்குமூலத்தை படித்துப் பார்த்தால் அவர் விடுதலைப் புலிகளின் அனுதாபி என்பது தெரிகிறது.

9 வாட் பேட்டரியைக் கொண்டு வெடிகுண்டு தயாரிக்க முடியும் என்பது பேரறிவாளனுக்குத் தெரியாதா? மின்னணு படிப்பில் டிப்ளமோ படித்த பேரறிவாளனுக்கு இது தெரியாதா? வெடிகுண்டு தயாரிப்பில் முக்கியமாக விளங்கியதே அந்த பேட்டரிதான். 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்துக்காக இப்போது தீர்ப்பை மாற்ற வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பேரறிவாளன் தரப்பில், அவர் வாங்கிக் கொடுத்த பேட்டரியைக் கொண்டுதான் வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது இன்னும் முடிவாகவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

வழக்கின் பின்னணி: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்கில் சிபிஐ அதிகாரி தவறான தகவல் அளித்ததன் மூலம் தனக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால், தனக்கு வழங்கிய தண்டனைத் தீர்ப்பை திரும்பப் பெற வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது. 

இந்த மனு மீது சிபிஐ பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க மத்திய அரசின் சார்பில் சிபிஐ மூத்த காவல் கண்காணிப்பாளர் டி. புனிதமணி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்ட விவரம் வருமாறு:
மனுதாரருக்கு (பேரறிவாளன்) விதிக்கப்பட்ட தண்டனையை திரும்பப் பெறக் கோரியும், வழக்கு விசாரணையை மீண்டும் நடத்தக் கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராரிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மனுதாரர் (பேரறிவாளன்) தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் 1999, அக்டோபர் 10-ஆம் தேதி தள்ளுபடி செய்துள்ளது.

19 ஆண்டுகளுக்கு முன் அளிக்கப்பட்ட தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தலையிடக்கூடாது. அரசியல் அமைப்புச் சட்டம் 137-ஆவது பிரிவின் படி, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள், உத்தரவுகள் நாடாளுமன்றம் உருவாக்கும் சட்ட விதிகளுக்கு உள்பட்டதாகும். 

145-ஆவது பிரிவின்படி, எந்தவொரு தீர்ப்பளிக்கப்பட்ட உத்தரவையும் மறு ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. இதன்படி, தண்டனை தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி மனுதாரருக்கு இருந்த பரிகார வாய்ப்பை பயன்படுத்தியாகிவிட்டது. மேல்முறையீடு, மறு ஆய்வு மனுக்கள் ஏற்கெனவே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, தமிழக ஆளுநரிடமும் குடியரசுத் தலைவரிடமும் மனுதாரர் சார்பில் அளிக்கப்பட்ட கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டன. கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது. கருணை மனுக்கள் மீது தாமதமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் தண்டனை குறைக்கப்பட்டதே தவிர, விசாரணையின் குறைகள் பேரில் தண்டனை குறைக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மனுதாரரின் பங்கு குறித்து தண்டனை தீர்ப்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்பில்லை, அப்பாவி என மனுதாரர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நிலையில் விசாரணை அதிகாரி வி. தியாகராஜன் மனுதாரரின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துள்ளதாக தெரிவித்து, எவ்வித அடிப்படையும் இன்றி தாக்கல் செய்த மனு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. எனவே, 1998, மே 11-ஆம் தேதி விதிக்கப்பட்ட தண்டனை தீர்ப்பை திரும்பப் பெறக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை நீதிசார் நலன் கருதி உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். மனுதாரருக்கு பெரிய அளவுக்கு அபராதம் விதிக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com