புது தில்லி: ரஃபேல் வழக்கில், பிரதமர் மோடியை திருடன் என்று நீதிமன்றமே கூறிவிட்டதாக ராகுல் கூறியது தொடர்பான அவமதிப்பு வழக்கில் அவரது சார்பில் இன்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
ரஃபேல் விவகாரம் தொடர்பாக கூறிய கருத்துக்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ள ராகுல் காந்தி பதில் மனு தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இன்று ராகுல் தரப்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசும்போது பிரதமர் மோடியை மிகவும் கடுமையாக விமர்சித்தார். அதில் ரஃபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்கொன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை குறிப்பிட்டு, பிரதமர் மோடியை திருடன் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டதாகவும் ராகுல் பேசியிருந்தார்.
இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ராகுல் காந்திக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் அக்கட்சியின் எம்.பி. மீனாட்சி லேகி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக ராகுல் காந்தி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் ரஃபேல் விவகாரம் தொடர்பாக கூறிய கருத்துக்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ள ராகுல் காந்திக்கு, உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் வருத்தம் தெரிவித்து விட்டதால், மீனாட்சி லேகி தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைக்கவேண்டும் எனக் கூறி ராகுல் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஒரு மனுவை தாக்கல் செய்தார்.
அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், ராகுல் காந்தியின் பதிலில் திருப்தி இல்லை என கூறி அவருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இதையடுத்து, ராகுல் தரப்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.