தேவதுர்கா: வெள்ளம் சூழ்ந்த பாலத்தில் துளியும் பயமின்றி சிறுவன் ஒருவன் ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் அங்குள்ள பாலங்கள் மற்றும் தரைப்பாலங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.
குறிப்பாக யதுகிரி மற்றும் தேவதுர்கா ஆகிய இடங்களுக்கு நடுவே உள்ள பாலமானது கிருஷ்ணா ஆற்றில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தின் காரணமாக நீரால் நிரம்பி அது சாலையா அல்லது பாலமா என்று அடையாளம் காண இயலாத நிலையில் உள்ளது.
அப்போது ஆம்புலன்ஸ் ஒன்று அந்த பாலத்தைக் கடக்க வேண்டிய சூழல். பாலம் எது என்று ஓட்டுநர் அடையாளம் காண இயலாமல் தடுமாறிய சூழலில், சிறுவனொருவன் துளியும் பயமின்றி பாலத்தை கடக்க ஆம்புலன்சிற்கு உதவியுள்ளான்.
அப்போது எடுக்கப்பட்ட விடியோவானது இணையத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.