தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சிக்கால ஊதியம்: இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!

அரசு கல்லூரிகளைப் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இன்டர்ன்ஷிப் பயிற்சி காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது. 
தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் பயிற்சிக்கால ஊதியம்: இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

அரசுக் கல்லூரிகளைப் போலவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சிக் காலத்தில் ஊதியம் வழங்கப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இறுதியாண்டு முடியும் தருவாயில், ஓராண்டுக்கு இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறுவார்கள். அரசு மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த பயிற்சிக்காலத்தின் போது ரூ. 6,000 முதல் ரூ.20,000 வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டு ஒன்றுக்கு சுமார் 40,000 மாணவர்கள் இதன்மூலம் பயன்பெறுகின்றனர். ஆனால், அதே நேரத்தில் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு இந்த ஊதியம் கிடைப்பதில்லை. 

தங்களுக்கும் பயிற்சிக் காலத்திற்கான ஊதியம் கிடைக்க வேண்டும் என்று தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது இந்த விவகாரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சில் இதற்கான விதிமுறையில் மாற்றம் செய்து, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும் பயிற்சிக்கால ஊதியம் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. விதிமுறையில் மாற்றம் செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன என்றும் விரைவில் இது அமலுக்கு வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனியார் மற்றும் அரசுக் கல்லூரிகளில் உள்ள மாணவர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கவுன்சிலில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருத்துவ கவுன்சிலின் இந்த அறிவிப்பு தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. 

அதே நேரத்தில்,  ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவர், அதே கல்லூரியில் இன்டர்ன்ஷிப் பயிற்சி செய்தால் மட்டுமே அவருக்கு அந்த கல்லூரி ஊதியம் வழங்கும். ஒரு கல்லூரியில் படித்துவிட்டு, வேறு ஒரு கல்லூரியில் பயிற்சி மேற்கொண்டால் ஊதியம் வழங்கப்படமாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது.  

இந்தியா முழுவதும் 240 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. தென் இந்திய மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com