முதுகெலும்பு இல்லாத ஊடகம் ப.சிதம்பரத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது: ராகுல்

ப.சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.
முதுகெலும்பு இல்லாத ஊடகம் ப.சிதம்பரத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துகிறது: ராகுல்
Published on
Updated on
1 min read

ப.சிதம்பரம் மீதான சிபிஐ நடவடிக்கை அதிகார துஷ்பிரயோகம் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் குற்றம்சாட்டினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. 

இதையடுத்து சிதம்பரத்தை கைது செய்வதற்காக தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனால் சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர். 

இதனிடையே, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சந்திப்பதற்காக, ப.சிதம்பரமும், கபில் சிபலும் முயன்றனர். ஆனால், அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது முதல் ப.சிதம்பரம் இருக்கும் இடம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. தில்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணி முதல் தொடர்ந்து 2 முறை வந்தடைந்தனர். 

மேலும், தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடனேயே, அதனை எதிர்த்து ப.சிதம்பரம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் புதன்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல், சல்மான் குர்ஷித் மற்றும் விவேக் டங்கா ஆகியோர் ப.சிதம்பரம் சார்பாக ஆஜராயினர். இந்த மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா அனுப்பி வைத்தார். இதனிடையே ப.சிதம்பரத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், முதுகெலும்பு இல்லாத ஊடகம் ப.சிதம்பரம் மீது அவப்பெயர் ஏற்படுத்துவதாக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியவற்றை மத்திய மோடி அரசு தவறாகப் பயன்படுத்துகிறது. மத்திய அரசின் இந்த அதிகார துஷ்பிரயோக நடவடிக்கையை நான் கடுமையாக கண்டிக்கிறேன். முதுகெலும்பு இல்லாத ஊடகமும் இதில் மத்திய அரசுக்கு துணை போகிறது. ப.சிதம்பரம் மீது ஊடகங்கள் திட்டமிட்டு அவப்பெயர் ஏற்படுத்துகிறது என்று குற்றம்சாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com