கர்நாடக அரசியலில் மஜத, காங்கிரஸ் இடையிலான பிரச்னை மேலும் பூதாகரமாகும் விதமாக இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றனர்.
இந்நிலையில், மஜத தலைவரும், கர்நாட முன்னாள் முதல்வருமான குமாரசாமி தான் தன்னை எதிரியாக கருதியதாக அம்மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார்.
என்னை நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் குமாரசாமி ஒருநாளும் கருதியது இல்லை. ஆனால், எதிரியாக மட்டும் நினைத்திருந்தார். அதுதான் அனைத்து பிரச்னைகளுக்கும் முக்கிய காரணம் என்று சித்தராமையா சாடியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், கர்நாடகத்தில் மஜத, காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ மஜத தலைவர்கள் தேவெ கௌடாவும் அவரது மகன் குமாரசாமியும் தான் முக்கிய காரணம் எனவும் சித்தராமையா தெரிவித்தார்.
முன்னதாக, தனது மகனை முதல்வராக்குவதற்கு பதிலாக பாஜக தலைவர் எடியூரப்பாவை முதல்வராக்குவதில் தான் சித்தாரமையா முழு கவனம் செலுத்தியதாகவும், அவர்கள் இருவரும் ஏற்கனவே இணைந்து பணியாற்றியவர்கள் எனவும் தேவெ கௌடா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.