லக்னௌ: யோகி ஆதித்யநாத் ஆட்சிக்காலத்திலேயே எப்படியாவது ராமர் கோவில் கட்டப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் பேசியுள்ளது சர்ச்சையாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில தொழிலாளர் துறையின் தலைவராகவும், இணை அமைச்சராகவும் இருப்பவர் சுனில் பராலா. அயோத்யா விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தினசரி விசாரணை நடந்து வரும் வேளையில், இதுதொடர்பாக அவர் பேசியிருப்பதாவது:
முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்காலத்திலேயே அயோத்தியில் எப்படியாவது ராமர் கோவில் கட்டப்படும்:
யோகி ஆதித்யநாத் ஒரு மன்னர் போன்றவர்; ராமர் கோவில் கட்டுவதற்குத் தேவையான பெரும் ஆற்றல் அவரிடம் உள்ளது.
நமது மாநிலத்திற்கு யோகி செய்துள்ள விஷயங்கள் கற்பனை கூட செய்து பார்க்க இயலாதவை.
ஹரித்வார் புனித யாத்திரை செய்பவர்கள் தங்கள் பயணத்தின் போது டி.ஜே மூலம் பாடல்களை இசைக்கத் தற்போது தடை கிடையாது. இந்தப் பயணத்தினை முன்னர் எதிர்த்த அதிகாரிகள் கூட தற்போது ஹரித்வார் யாத்திரிகர்களைப் பூக்களைத் தூவி வரவேற்கின்றனர்.
விரைவில் அயோத்யா பயணம் மேற்கொள்பவர்களையும் பூக்களைத் தூவி வரவேற்கும் முறை கொண்டு வரப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார் .