மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தெலங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்

தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்

News image
தெலங்கானா என்கவுன்டர் நடந்தது எப்படி? காவல் ஆணையர் விளக்கம்
Updated On :6 டிசம்பர் 2019, 10:40 am

DIN


ஹைதராபாத்: தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற வழக்கில் கைதான நால்வரும் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.

சம்பவம் நடந்த இடத்திலேயே தற்போது வரை குற்றம்சாட்டப்பட்டவர்களின் உடல்கள் இருக்கும் நிலையில், அங்கேயே செய்தியாளர்களை சந்தித்து, நடந்தது என்ன என்பது குறித்து காவல் ஆணையர் சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.

அவர் கூறியதாவது, பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சென்ன கேசவலு, முகமது ஆரிஃப் உள்ளிட்ட 4 பேரையும் டிசம்பர் 3ம் தேதி முதல் 10 நாட்களுக்கு போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு ஆதாரங்களை சேகரித்து வந்தோம். பலாத்காரம் மற்றும் கொலையைச் செய்ததை நான்கு பேருமே ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளனர். பெண் மருத்துவரின் செல்போன் உள்ளிட்ட உடைமைகளை அவர்கள் மறைத்து வைத்திருந்ததாகக் கூறினர். அதைக் காட்டுவதாகக் கூறியதால், சம்பவ இடத்துக்கு அழைத்து வருவது அவசியமாகிறது.

மேலும், இன்று அதிகாலை, நான்கு பேரையும், சம்பவ இடத்தில் குற்றத்தை எப்படி செய்தார்கள் என்று நடித்துக் காட்டவும் அழைத்து வந்தோம். அப்போது திடீரென சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களது கையில் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். முகமது ஆரிஃப்தான் எங்களை நோக்கி சுட்டான். 

ஒரு கட்டத்தில் போலீஸார் மீது நான்கு பேரும் சேர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதில் எஸ்.ஐ. வெங்கடேஷ் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர்.

இதனால், நான்கு பேரையும் என்கவுன்டர் செய்தோம். சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் என்கவுன்டர் நடந்தது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

பகலில் ஏன் அழைத்து வரவில்லை என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, பகலில் அழைத்து வந்தால், பாதுகாப்புக் குறைபாடு ஏற்படும் என்றுதான் அதிகாலையில் அழைத்து வந்தோம். குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய அழைத்துச் சென்ற போதே அவர்களைத் தாக்க பொதுமக்கள் முயற்சித்ததால் தான் அதிகாலையில் அவர்களை வெளியே அழைத்து வந்தோம் என்று ஆணையர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.