குற்றவாளிகள் மரண வாசலை நெருங்கி விட்டனர்: நிர்பயாவின் தந்தை பேட்டி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் மரணத்தை நெருங்கி விட்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். 
குற்றவாளிகள் மரண வாசலை நெருங்கி விட்டனர்: நிர்பயாவின் தந்தை பேட்டி

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் மரணத்தை நெருங்கி விட்டனர் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை தெரிவித்துள்ளார். 

கடந்த 2012-ல் தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து, சிங்கப்பூர் மருத்துவமனை வரை சென்றும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

2012 நிர்பயா பாலியல் வன்கொடுமை- கொலை வழக்கின் குற்றவாளிகள் நால்வருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமார் சிங், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், வருகிற 17ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறது. 

இதன் காரணமாக குற்றவாளிகளின் தூக்குத்தண்டனை தேதி அறிவிப்பு தள்ளிப்போயுள்ளது. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நிர்பயாவின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கின் விசாரணை டிச.18ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பத்ரிநாத், 'இந்த வழக்கில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் மரண வாசலை நெருங்கியுள்ளனர். அவர்களின் தூக்குத் தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும். 

நீதிமன்றத்தால் இந்த வழக்கு விரைவாக முடிக்கப்பட்டிருக்கிறது. அதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். எங்களது இந்த முயற்சி நாட்டில் உள்ள ஒவ்வொரு பெண்களின் பாதுகாப்புகாகவும் தான்.

அதே நேரத்தில், தூக்குத் தண்டனை நிறைவேற்றத்தை தாமதப்படுத்தவே குற்றவாளிகளில் ஒருவரான அக்‌ஷய் குமார் சிங், மறுஆய்வு மனுவை தாக்கல் செய்துள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் மறுஆய்வு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என்று நம்புகிறோம்' என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறுகையில், 'குற்றவாளிகளின் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாங்கள் 7 ஆண்டுகளாக காத்திருக்கிறோம். இன்னும் ஒரு வாரம் காத்திருக்கிறோம். டிச.18 அன்று, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைக்கான வாரண்ட் வரும் என எதிர்பார்க்கிறோம்' என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com