81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவைக்கு, நவம்பர் 30-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ்-ஜெஎம்எம்-ஆர்ஜேடி கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளும் பாஜக 27 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், அங்கு ஆட்சியமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதையடுத்து தலைநகர் தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவகத்தில் அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜார்க்கண்ட் வாக்குப்பதிவு மையங்கள் அருகே காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் அனைவரும் தொடர்ந்து தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே, அரசியலில் தீண்டத்தகாத கட்சி என்று எதுவும் இல்லை என ஜெவிஎம் (பி) கட்சித் தலைவர் பாபுலால் மரண்டி தெரிவித்துள்ளார். இறுதி முடிவுகள் வெளியான பிறகு தனது அடுத்தகட்ட நிலைப்பாடு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும் கூறினார்.