
புது தில்லி: சபரிமலை தீர்பபை மறுசீராய்வு செய்யும் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் 28-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்த அமர்வில் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்திருந்தார்.
இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 13-ஆம் தேதி தீர்ப்பு மறுஆய்வு செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. அதேசமயம், தீர்ப்புக்கு தடை விதிக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அதன்பின், இதை விசாரிக்கும் அமர்வில் இடம்பெற்றுள்ள நீதிபதி இந்து மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் உள்ளதால் ஜனவரி 30-ஆம் தேதி வரை விசாரிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி 22-ஆம் தேதி தெரிவித்தது.
இதனிடையே சபரிமலை தொடர்பான மறுஆய்வு மனுக்களை பிப்ரவரி 6-ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் மற்றும் இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் தனது இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தது.
இந்நிலையில் சபரிமலை தீர்பபை மறுசீராய்வு செய்யும் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்து புதனன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.