லக்னௌ: 2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட் சட்டப்பேரவையில் வியாழனன்று தாக்கல் செய்யப்பட்டது.
2019-20 ஆம் ஆண்டுக்கான உத்தரபிரதேச மாநில பட்ஜெட்டை மாநில நிதியமைச்சர் ராஜேஷ் அகர்வால், வியாழனன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
ரூ. 4.79 லட்சம் கோடி மதிப்பிலான இந்த பட்ஜெட்டானது விவசாயிகள் மேம்பாடு, சுகாதாரத் துறை வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும், வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயத் துறை மேம்பாட்டுக்கென ரூ. 1500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதேபோல பசுப்பாதுகாப்புக்கு மட்டும் ரூ. 600 கோடி இந்த பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாநில கலால் துறை சார்பாக மாநிலம் முழுவதும் கால்நடை கொட்டகை கள் கட்டுவதற்குகாக சிறப்பு செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ. 165 கோடி வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கிராமப்புற பகுதிகளில் கோசாலைகளை உருவாக்கி பராமரிப்பதற்காக ரூ. 247.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நகர்ப்புற பகுதிகளில் கைவிடப்பட்ட கால்நடைகளை பராமரிக்க "கன்ஹா கோசாலைகாலை" உருவாக்குவதற்காக மற்றொரு 200 கோடி ரூபாய் ஓதுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு காரணங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் கால்நடைகளை பராமரிக்கும் இல்லங்களை உருவாக்க ரூ. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.