அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: ராஜீவ் சக்ஸேனாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் 

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கு: ராஜீவ் சக்ஸேனாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் 

புது தில்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக மருத்துவ காரணங்களுக்காக தனக்கு ஜாமீன் அளிக்குமாறு ராஜீவ் சக்ஸேனா விசாரணை நீதிமன்றத்தில் கோரியிருந்தார். அதைத்தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி ராஜீவ் சக்ஸேனாவின் உடல் நிலை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நீதிமன்றத்தில் அளித்தது.

அதை கடந்த 14ஆம் தேதி பரிசீலித்த நீதிமன்றம், அவருக்கு 7 நாள்கள் இடைக்கால ஜாமீன் அளித்தது. பின்னர் அவருக்கு வழங்கப்பட்டிருந்த இடைக்கால ஜாமீனை 25ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் இடைத்தரகர் ராஜீவ் சக்ஸேனாவுக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது. 

திங்களன்று மீண்டும் ராஜீவ் சக்ஸேனா தரப்பில் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  அமலாக்கத்துறை தரப்பில் எந்த வித எதிர்ப்பும் தெரிவிக்கப்படாத காரணத்தால் ஜாமீன் வழங்கி நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.

ஐந்து லட்ச ரூபாய் மதிப்பு பிணைப் பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இரு நபர் உத்தரவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கின் சாட்சிகளை கலைக்கும் எந்த முயற்சியிலும் ஈடுபடக் கூடாது என அவருக்கு அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், தேவைப்படும் சமயத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்றும் தெளிவு படுத்தியுள்ளது.

அதேசமயம் அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com