புது தில்லி: மத்திய அரசு அனுப்பியுள்ள 24 கேள்விகள் அடங்கிய பட்டியலுக்கு ஜூலை 22-க்குள் பதில் அளிக்கவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்று டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக வலைதளத்தில் விடியோ பகிர்வதற்கு உதவும் செயலிகளில் டிக் டாக் மற்றும் ஹலோ ஆகிய இரண்டும் புகழ்பெற்றவையாகும். ஆனால் இந்த செயலிகள் தேச விரோத செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக ஆர்.எஸ்.எஸ்ஸின் துணை அமைப்பான ஸ்வதேஷி ஜாக்ரன மஞ்ச் சமீபத்தில் பிரதமர் மோடியிடம் புகார் செய்திருந்தது.
இதையடுத்து இந்த இரு செயலிகளுக்கும் 24 கேள்விகள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இதற்கு ஜூலை 22-க்குள் பதில் அளிக்கவில்லை என்றால் தடை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்தியப் பயனாளர்கள் குறித்த தகவல்களை வெளிநாடுகளுக்கோ அல்லது மூன்றாம் தரப்பினருக்கோ அளிக்கக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் அரசின் நடவடிக்கைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்குவதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.