பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் 

பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் 
Updated on
2 min read


புது தில்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கை விசாரிக்கும் லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பணிக் காலத்தை மேலும் 9 மாதங்கள் நீட்டிப்பு செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கை விசாரித்து வரும் லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விசாரணையை 9 மாதத்துக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளைக் கடந்துவிட்ட போதிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால், வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்துக்குக் கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன், தன்னுடைய பணிக்காலம் முடிவுக்கு வர இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிபதி தரப்பில் கோரப்பட்டது. 

இதையடுத்து, வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, சிபிஐ சிறப்பு நீதிபதிக்குப் பணிநீட்டிப்பு வழங்குவது தொடர்பான சட்டவிதிகளைக் கண்டறிந்து, பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதியின் பணிக் காலத்தை நீட்டித்தும், 9 மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com