

இந்த முறை அயோத்தியில் ராமர் கோயில் கட்டவில்லை என்றால் மக்கள் எங்களை நிச்சயம் தண்டிப்பார்கள் என்று சிவசேனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் சஞ்சய் ரௌத், ஏஎன்ஐ செய்தியாளரிடம் வியாழக்கிழமை தெரிவித்ததாவது:
கடந்த 2014 தேர்தலின் போதே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்குறுதி அளித்தது. ஆனால், அதை நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலும் ராமர் கோயிலை முன்வைத்து தான் நாங்கள் சந்தித்துள்ளோம். அயோத்திக்கு சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே உடன் அங்கு சென்ற நாங்கள் அனைவரும், இந்த முறை ராமர் கோயில் கட்டும் பணி நிச்சயம் தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்.
ஒருவேளை இந்த முறையும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டிமுடிக்கப்படவில்லை என்றால் மக்கள் எங்களை நிச்சயம் தண்டிப்பார்கள். ஏனென்றால், பாஜக-வுக்கு 303 உறுப்பினர்கள், சிவனேனைக்கு 18 எம்.பி.க்கள் என தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் 350 உறுப்பினர்கள் என்ற பெரும்பான்மையுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்துள்ளது.
இதற்கு மேலும் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு என்ன தேவை வேண்டியுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.