புது தில்லி: மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக வெற்றி பெற்று சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டது. அதையடுத்து அரசுத்துறைகளில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் கூட நடத்தைக் குறைபாடு காரணமாக வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் 12 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை ஆணைய உயர் அதிகாரிகள் 15 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து, நிதித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர்கள் மீது லஞ்சம் கேட்டல், நிதி முறைகேடு மற்றும் குற்றச்சதி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கட்டாய ஓய்வுஅளிக்கப்பட்டவர்களில் இந்தத் துறையின் முதன்மை ஆணையர்கள் மற்றும் ஆணையர்கள் அடங்குவர்.
இந்த 15 அதிகாரிகளில் சென்னை அலுவலகத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஹர்ஷா எனும் ஆணையரும் அடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.