புது தில்லி: 17வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது முதல் புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்று வருகிறார்கள்.
நாடாளுமன்றத்தில் நேற்று பதவியேற்பு விழா தொடங்கியது முதலே பாஜக எம்.பி.க்கள் பலரும் அவ்வப்போது ஜெய் ஸ்ரீ ராம் என்றும், பாரத் மாதா கி ஜெய் என்றும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். இது நேற்று விவாதத்துக்குரிய விஷயமாகவும் மாறிப்போனது.
இன்று காலை தமிழக எம்.பி.க்கள் தமிழில் பதவி பிரமாணம் செய்து கொண்டனர். தமிழக எம்.பி.க்கள் பதவியேற்கும் போது வாழ்க தமிழ், வாழ்க பெரியார், வாழ்க இந்தியா என பலவாறு கோஷம் எழுப்பினர்.
இதற்கிடையே உத்தரப்பிரதேசத்தின் ரே பரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா இன்று பிற்பகலில் மக்களவை உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சோனியா ஹிந்தியில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். அதனை ராகுல் தனது செல்போனில் படம் பிடித்துக் கொண்டார்.
சோனியா பதவிப் பிரமாணம் செய்யும் போது சில பாஜக எம்.பி.க்கள் ஜெய் ஸ்ரீராம் என்றும், பாரத் மாதா கி ஜெய் என்றும் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
பதவிப் பிரமாணம் செய்துவிட்டு சோனியா தனது இருக்கையில் வந்து அமரும் போது சில பாஜக உறுப்பினர்கள், ஹிந்தியில் பதவியேற்றுக் கொண்டதற்கு நன்றி என்று கூறினர்.
காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து நின்று சோனியாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.