புது தில்லி: ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மோடி அரசு இரண்டாம் முறையாக பதவியேற்றுக் கொண்ட பின்னர், நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசினார்.
இந்நிலையில் ஆர்வத்தை உண்டாக்காத வெற்றுப் பேச்சு என்று வியாழனன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நிகழ்த்திய உரை குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி மற்றும் காங்கிரஸ் தலைவர் ஆனந்த் ஷர்மா இருவரும் கூட்டாக செய்தியாளர்களை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
ஜனாதிபதியின் உரை என்பது பிரதமர் மோடியின் உரையின் மறு ஒளிபரப்பு போன்றுதான் இருந்தது. அவரது பேச்சில் வேலைவாய்ப்பின்மை மற்றும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சி ஆகியவை குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனவே இது எந்த ஒரு ஆர்வத்தையும் உண்டாக்காத வெற்றுப் பேச்சாக உள்ளது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற பாஜகவின் கோஷத்தை ஆதரிக்கும் வகையில் ஜனாதிபதி பேசியுள்ளார். ஆனால் இந்தியா போன்ற பல்வேறு வேற்றுமைகள் நிறைந்த ஒரு நாட்டில் இது சாத்தியம் இல்லை.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.